சிறுவயதிலேயே திரையுலகில் கால்பதித்து இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிம்பு. நேற்று அவர் தனது 43-வது பிறந்தநாளை கொண்டாடினார். இந்த சிறப்பு நாளை முன்னிட்டு ரசிகர்கள், திரைத்துறையினர் மற்றும் பல பிரபலங்கள் சமூக வலைதளங்களில் அவருக்கு வாழ்த்துகளை குவித்தனர்.
இந்த நிலையில், தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் நடிகர் சிம்பு தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் ஒரு நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “எனக்குக் கிடைத்த பிறந்தநாள் வாழ்த்துகளாலும், நீங்கள் காட்டிய அன்பினாலும் நான் மிகவும் நெகிழ்ந்து போனேன். திரையுலகைச் சேர்ந்தவர்கள், ஊடக நண்பர்கள், நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகள் என அன்புடன் வாழ்த்திய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
என் ரசிகர்களே, இத்தனை ஆண்டுகளாக நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையும் ஆதரவுமே எனக்கு மிகப்பெரிய உந்துசக்தி. உங்கள் பாசமும் ஊக்கமும் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது. நீங்கள் இல்லாமல் நான் இல்லை!” என்று மனம்திறந்து பதிவிட்டுள்ளார்.
