மலையாள சினிமாவில் 60க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த அனுபவம் கொண்டவர் நடிகை நவ்யா நாயர். தமிழில் ‘அழகிய தீயே’ படத்தின் மூலம் அறிமுகமான அவர், ‘சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி’, ‘பாசக்கிளிகள்’, ‘அமிர்தம்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். பல ஆண்டுகளுக்கு முன்பே திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டிலான நவ்யா நாயர், தொடர்ந்து நடன நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். இந்நிலையில், தற்போது ‘பாதி ராத்திரி’ என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் மீண்டும் நடிப்புக்கு திரும்பியுள்ளார். தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடிக்கவும், ஒரு திரைப்படத்தை இயக்கவும் அவர் தயாராகி வருகிறார்.
இதுகுறித்து நவ்யா நாயர் கூறியதாவது: எனக்கு படம் இயக்க வேண்டும் என்ற ஆசை நீண்ட காலமாகவே உள்ளது. ஆனால் முன்பு தொடர்ந்து நடிப்பில் பிசியாக இருந்ததால் அந்த எண்ணம் நிறைவேறவில்லை. நடுவில் ஒரு கட்டத்தில் படம் இயக்க வேண்டும் என்ற உறுதியான முனைப்பும் இருந்தது. ஆனால் அது சாத்தியமாகவில்லை. குடும்ப வாழ்க்கை, நடன நிகழ்ச்சிகள், ஸ்கிரிப்ட் வாசிப்பு போன்ற பல பணிகள் இருப்பதால், தொடர்ந்து இயக்கத்திற்கான வேலைகளில் ஈடுபட முடியாத சூழல் ஏற்பட்டது. முன்பு ஒரு கதையை எழுதித் தயாராக வைத்திருந்தேன். அதில் சில மாற்றங்களை செய்தால், அது இன்னும் புதுமையாக இருக்கும் என நினைக்கிறேன்.
ஒரு பெண்ணுக்கு மூன்று உலகங்கள் இருக்கின்றன. ஒன்று மனதுக்குள் இருக்கும் உலகம், மற்றொன்று வீட்டுக்குள் இருக்கும் உலகம், மூன்றாவது சமூகம் என்கிற வெளி உலகம். இந்த மூன்றையும் மையமாகக் கொண்டு தான் இந்த படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த படத்தை நான் இயக்குவேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்று நவ்யா நாயர் தெரிவித்துள்ளார்.
