‘சீதாராமம்’ திரைப்படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான நடிகையாக மாறியவர் மிருணாள் தாக்கூர், நடிகர் தனுஷை காதலிப்பதாக கடந்த சில வாரங்களாக பல்வேறு செய்திகள் வெளியாகி வந்த நிலையில் இந்தச் செய்திகள் அனைத்தும் வதந்தி என சமீபத்தில் நடிகை மிருணாள் தாக்கூர் முற்றுப்புள்ளி வைத்தார். இந்த நிலையில், ஹிந்தி திரையுலகில் நடிகர் சித்தாந்த் சதுர்வேதியுடன் இணைந்து மிருணாள் தாக்கூர் நடித்துள்ள ‘தோ தீவானே செகர் மெய்ன்’ என்ற திரைப்படம் வரும் பிப்ரவரி 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியின்போது, அவர் தனது கடந்தகால காதல் அனுபவங்கள் மற்றும் பிரேக்கப் குறித்து மனம் திறந்து பேசியிருந்தார்.
அதேபோல், அவர் பங்கேற்ற மற்றொரு நிகழ்ச்சியில், ‘உங்களைப் பொறுத்தவரை காதல் என்றால் என்ன?’ என்ற கேள்வி அவரிடம் முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த மிருணாள் தாக்கூர், “காதல் என்பது மிகவும் அழகான ஒரு உணர்வு. இந்த உலகில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் அந்த அனுபவம் கிடைக்க வேண்டும். காதல் ஒருவரை இன்னும் சிறந்த மனிதராக மாற்றும் சக்தி கொண்டது. அனைவருக்கும் அப்படியான உண்மையான காதல் அமைய வேண்டும் என்று நான் மனதார விரும்புகிறேன். காதலில் மிகவும் முக்கியமான அம்சம் ஏற்றுக்கொள்ளுதல் தான்.
சில நேரங்களில் காதலை ஏற்றுக்கொள்வதும், அதை அங்கீகரிப்பதும் சிரமமானதாக இருக்கலாம். காதலுக்கான வரையறைகள் காலத்திற்கேற்ப மாறிக்கொண்டே இருந்தாலும், காதல் என்ற உணர்வு மட்டும் எப்போதும் மாறாததாக இருக்கும். காதலில் இருப்பவர்கள் கொடுப்பவர்களாக இருக்க வேண்டும் இதில் ஆண், பெண் என்ற எந்தவிதமான வேறுபாடும் இல்லை. நீங்கள் காதலில் இருந்தால், உங்கள் மனதை முழுமையாக அவர்களிடம் ஒப்படையுங்கள் என்று கூறியுள்ளார்.
