தெலுங்கு திரையுலகில் ஆக்ஷன் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து, மாஸ் ஹீரோவாக தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளவர் நடிகர் ரவி தேஜா. அவரது நடிப்பில் அடுத்ததாக ‘இருமுடி’ என்ற தலைப்பில் புதிய திரைப்படம் உருவாக உள்ளதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
அந்த அறிவிப்பின் போது வெளியிடப்பட்ட போஸ்டரில், ரவி தேஜா ஐயப்ப பக்தர் தோற்றத்தில் இருமுடி சுமந்தபடி, தனது கைகளில் ஒரு குழந்தையை தூக்கிக்கொண்டிருப்பது போல காட்சியளித்தார். தந்தை மற்றும் மகள் இடையிலான பாசப்பிணைப்பை மையமாகக் கொண்டு, அதன் பின்னணியில் இந்த திரைப்படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.
இதனிடையே, இந்த ஐயப்ப பக்தர் கெட்டப் தொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் பலவிதமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற ஒரு பேட்டியில் இயக்குநர் சிவா நிர்வானா இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். அவர் பேசுகையில், “இந்த திரைப்படத்தில் சபரிமலை மற்றும் ரவி தேஜாவின் ஐயப்ப பக்தர் கதாபாத்திரம் ஆகியவை கதையின் ஒரு பகுதியாக மட்டுமே வருகின்றன. பொதுவாகவே நமக்கு ஐயப்ப சுவாமி தொடர்பான உணர்ச்சி ஆழமாக இருக்கும். அதேபோல், படத்தின் கதையின் ஓட்டத்தில் சில காட்சிகளில் அவர் ஒரு ஐயப்ப பக்தராக தோன்றுகிறார். ஆனால், முழுக் கதையின் பயணம் வேறு தளத்தில் நகரும் என்று தெரிவித்துள்ளார்.
