தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங் என்ற பெயருடன் நீண்ட காலமாக முன்னணி நடிகராக வலம் வருபவர் அர்ஜுன். கதாநாயகனாக 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள அவர், சமீப காலங்களில் ஹீரோ வேடங்களுடன் மட்டுமல்லாமல் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். ஒரு குறுகிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் முழுமையான கதாநாயகன் வேடத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் அவர் நடித்து வருகிறார். இந்த படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தங்களது 28வது தயாரிப்பாக உருவாக்கி வருகிறது. பிரதீப் ரங்கநாதனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய சுபாஷ் என்பவர் இந்த படத்தின் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார்.
இந்த திரைப்படத்தில் அர்ஜுனுக்கு ஜோடியாக ‘விருமாண்டி’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை பெற்ற அபிராமி நடித்துள்ளார். இவர்களின் மகளாக வரும் கதாபாத்திரத்தில் ‘ஸ்டார்’ திரைப்படத்தின் மூலம் பிரபலமான பிரீத்தி முகுந்தன் நடித்துள்ளார். இவர்களுடன் விவேக் பிரசன்னா, ஜான் கொக்கென், அர்ஜுன் சிதம்பரம், பவன், திலீபன், வினோத் சாகர் உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘கே.ஜி.எப்’ படத்தின் மூலம் புகழ் பெற்ற இசையமைப்பாளர் ரவி பசூர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
ஆக்ஷன் மற்றும் பேமிலி டிராமா ஜானரை மையமாக கொண்டு உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக சென்னையில் தொடர்ந்து நடைபெற்று வந்தது. தற்போது, இந்த படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
