‘பேராண்மை’ திரைப்படத்தின் மூலம் கல்லூரி மாணவியாக நடித்துத் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை தன்ஷிகா. தஞ்சையில் பிறந்த இவர், சாய்பாபா மீது கொண்ட ஆழ்ந்த பக்தியின் காரணமாக தனது பெயரை சாய் தன்ஷிகா என மாற்றிக்கொண்டார். தமிழ் சினிமாவில் மாஞ்சா வேலு, பேராண்மை, கபாலி, இருட்டு உள்ளிட்ட குறிப்பிடத்தக்க பல படங்களில் நடித்ததன் மூலம் தனித்த அடையாளத்தை உருவாக்கியுள்ளார்.
தற்போது சாய் தன்ஷிகா, இயக்குநர் கவுதம் கிருஷ்ணா இயக்கத்தில் உருவான ‘யோகிடா’ என்ற திரைப்படத்தில் நடித்துத் தன் நடிப்பை நிறைவு செய்துள்ளார். இந்த படத்தை ஜப்பட்மா சினிமாஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் அருணகிரி மற்றும் ராஜ்குமார் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தில் ஷாயாஜி ஷிண்டே, மனோபாலா, கபீர் துஹான் சிங், எஸ்தர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பெண்களை மையமாக கொண்டு ஆக்சன் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில், சாய் தன்ஷிகா குறுகிய காலத்தில் அதிக டிரான்ஸ்பர் செய்யப்பட்ட நேர்மையான போலீஸ் அதிகாரி (இன்ஸ்பெக்டர்) கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஒரு கொலை சம்பவத்தை மையமாக கொண்டு இந்த படம் உருவாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ‘யோகிடா’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த படம் வருகிற பிப்ரவரி மாதம் 6-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
