கடந்த ஆண்டு நடிகர் டொவினோ தாமஸ் நடித்த ‘ஐடன்டிட்டி’, ‘எம்புரான்’, ‘மரணமாஸ்’, ‘நரிவேட்ட’, ‘லோகா – சாப்டர் 1’ ஆகிய திரைப்படங்கள் வெளியாகின. இந்த ஆண்டில் அவரது நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படமாக ‘பள்ளிச்சட்டம்பி’ அறிவிக்கப்பட்டுள்ளது. மலையாளத்தில் தயாராகும் இந்த படம், தமிழ் உட்பட ஐந்து மொழிகளில் வெளியிடப்பட உள்ளது.
டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் டொவினோ தாமஸுக்கு ஜோடியாக கயாடு லோஹர் நடித்துள்ளார். இவர்களுடன் விஜயராகவன், சுதீர் கரமனா, பிரசாந்த் அலெக்சாண்டர் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நடிகர் பிருத்விராஜ் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். எஸ். சுரேஷ் பாபு கதை எழுதியுள்ள இந்த படத்திற்கு ஜேக்ஸ் பிஜோய் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை டிஜோ டோமி மேற்கொண்டுள்ளார்.
இந்த படம் குறித்து டொவினோ தாமஸ் கூறுகையில், “இந்த திரைப்படம் 1950–60 காலகட்டத்தில் நடைபெறும் கதையை அடிப்படையாகக் கொண்டது. பொதுவாக பீரியட் படங்களில் நடிப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது. அந்த காலகட்டத்தை உணர்த்தும் இந்த மாதிரியான படங்களில் நடிப்பு சரியாக அமைந்தால், ரசிகர்களின் மனதில் நாம் இன்னும் ஆழமாக பதிய முடியும்” என்று தெரிவித்தார்.
