அஜித் குமார், அர்ஜுன், திரிஷா உள்ளிட்ட பல நட்சத்திர நடிகர்கள் இணைந்து நடித்த திரைப்படம் ‘மங்காத்தா’. வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான இந்த படம், 2011ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. சுமார் 24 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த படம், வெளியான போது 68 கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூலை குவித்து, அஜித்தின் முக்கியமான வெற்றிப் படங்களுள் ஒன்றாக அமைந்தது.
இந்த நிலையில், ‘மங்காத்தா’ திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகி வந்தன. தற்போது அதனை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யும் வகையில், ஜனவரி 23ஆம் தேதி இந்த படம் மீண்டும் தியேட்டர்களில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதனுடன், சில தினங்களுக்கு முன்பு ‘மங்காத்தா’ படத்தின் டிரைலரும் மீண்டும் வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்தது.
இதனைத் தொடர்ந்து, இப்படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு, ‘மங்காத்தா’ படப்பிடிப்பு நடைபெற்ற காலகட்டத்தில் நடிகர் அஜித்துடன் எடுத்துக்கொண்ட சில நினைவுப் புகைப்படங்களை தனது எக்ஸ் (X) சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். வெங்கட் பிரபு வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்களை அஜித் ரசிகர்கள் வேகமாக பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர். மேலும், இதனைத் தொடர்ந்து பிப்ரவரி மாதத்தில் அஜித் மற்றும் ஷாலினி இணைந்து நடித்த ‘அமர்க்களம்’ திரைப்படமும் மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
