நடிகர் சிவகார்த்திகேயன் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், தனது தற்போதைய திரைப்பட தேர்வுகள் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அந்த பேட்டியில் அவர், சமீப காலங்களில் தொடர்ந்து சீரியஸான கதைக்களம் கொண்ட படங்களில் நடித்துவிட்டேன் என்றும், அதனால் அடுத்ததாக தான் நடிக்கவுள்ள திரைப்படம் முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்ததாக இருக்க வேண்டும் என்பதில் மிகுந்த கவனத்துடன் இருக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்த திரைப்படம் ‘பராசக்தி’. சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான இந்த படத்தில், நடிகர் ரவி மோகன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும், அதர்வா மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
கடந்த 10-ம் தேதி வெளியான இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இதற்கிடையில், சிவகார்த்திகேயன் அடுத்ததாக இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
