தமிழர்களின் பாரம்பரிய திருநாளான தைப் பொங்கல் விழா, தமிழகம் முழுவதும் இன்று மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் புத்தாடைகள் அணிந்து, புதுப்பானையில் பொங்கலிட்டு தைத்திருநாளை மகிழ்ச்சியுடன் வரவேற்று வருகின்றனர். வீடுதோறும் பொங்கல் பண்டிகை களைகட்டியுள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை போயஸ் கார்டனில் அமைந்துள்ள நடிகர் ரஜினிகாந்தின் இல்லத்தின் முன்பு அவரது ரசிகர்கள் பெருமளவில் திரண்டனர். தங்கள் அபிமான நட்சத்திரத்தை காண ஆவலுடன் காத்திருந்தனர்.
இதையடுத்து வீட்டிலிருந்து வெளியே வந்த ரஜினிகாந்த், தனது ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும். விவசாயிகள்தான் நாட்டின் முதுகெலும்பாக உள்ளனர். விவசாயிகள் நன்றாக இருந்தால்தான் நாடு நன்றாக இருக்கும்” என்று கூறி, விவசாயிகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
