தமிழில் ‘மாநகரம்’, ‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’, ‘லியோ’ போன்ற படங்களை இயக்கி தனித்துவமான இடத்தை பிடித்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ், சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் ‘கூலி’ திரைப்படத்தை இயக்கினார். இப்படம் வெளியான கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும், ஒரு நல்ல வசூலை குவித்தது.
அடுத்த படமாக நடிகர் கார்த்தியை வைத்து ‘கைதி 2’ திரைப்படத்தை அவர் இயக்குவார் என தகவல்கள் வெளியான நிலையில், அதற்கிடையில் தெலுங்கு திரையுலகில் ஒரு படம் இயக்க உள்ளதாக செய்தி பரவியது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக இன்று (ஜனவரி 14) அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் நடிக்கும் புதிய படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார். ‘புஷ்பா 2’, ‘குட் பேட் அக்லி’ உள்ளிட்ட படங்களை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அல்லு அர்ஜூனின் 23-வது திரைப்படமாகவும், லோகேஷ் கனகராஜின் 7-வது இயக்கமாகவும் உருவாகும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது அல்லு அர்ஜூன் தனது 22-வது படமாக அட்லி இயக்கத்தில் ஒரு மிகப்பெரிய பிரம்மாண்டமான படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
