நடிகை சமந்தா தயாரித்து நடித்துள்ள திரைப்படம் ‘மா இண்டி பங்காரம்’. இயக்குநர் நந்தினி ரெட்டி இயக்கியுள்ள இந்த திரைப்படம் ஜூன் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஆரம்பத்தில் மே மாத வெளியீடாக திட்டமிடப்பட்டிருந்த இப்படம் பின்னர் ஜூன் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராமில் உரையாடியபோது, ஜூன் 19ஆம் தேதி வெளியாகும் என்பதை சமந்தா உறுதிப்படுத்தியிருந்தார்.
இந்த நிலையில், இப்படம் குறித்த மேலும் ஒரு சுவாரஸ்யமான தகவலை சமந்தா பகிர்ந்துள்ளார். அதன்படி, இயக்குநர் நந்தினி ரெட்டி முதலில் நடிகை சாய் பல்லவியை மனதில் வைத்து இந்த கதையை எழுதியதாக கூறியுள்ளார். ஆனால் சாய் பல்லவி பல படங்களில் பிஸியாக இருந்ததால் அந்த வாய்ப்பை ஏற்க முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
அதன்பிறகு சாய் பல்லவிக்காக எழுதப்பட்ட கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு தன்னிடம் கூறப்பட்டதாகவும், கதை மிகவும் பிடித்ததால் தயாரித்து நடிக்க சம்மதித்ததாகவும் சமந்தா தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளித்த சாய் பல்லவி, படக்குழுவினருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்து, இந்த படம் சமந்தாவுக்காகவே உருவாக்கப்பட்டது போல இருப்பதாகவும், அதை திரையரங்கில் காண ஆவலுடன் காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் சமந்தா மற்றும் நந்தினி ரெட்டிக்கு தனது அன்பான வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.
