நடிகர் அஜித்குமார், ‘குட்பேட் அக்லி’ திரைப்படத்தை தொடர்ந்து, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ள புதிய படத்தில் மீண்டும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இம்மாத இறுதியில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையில், கார் பந்தயத்திலும் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார் அஜித். கடந்த ஆண்டு அபுதாபி, பார்சிலோனா, மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் நடைபெற்ற கார் பந்தய போட்டிகளில் தனது அணியினருடன் கலந்து கொண்டார். தற்போது அவர், 24 ஹெச் சீரிஸ் – மத்திய கிழக்கு டிராபிக்கான கார் பந்தயத்தில் பங்கேற்று வருகிறார்.
இந்த கார் பந்தயத்தின் நடுவே அஜித்குமார் பேசியுள்ள வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், நான் வாழ்க்கையில் சிறப்பாக இருக்க வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புவது போல, அவர்களும் தங்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதே என் விருப்பம். அனைவருக்கும் சிறந்ததும் அழகானதுமான வாழ்க்கை அமைய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
