தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்தவர் மியா ஜார்ஜ். இவர் தமிழில் வெளியான இன்று நேற்று நாளை திரைப்படத்தின் மூலம் பெரும் கவனம் பெற்றார். கடந்த 2020ஆம் ஆண்டு அஸ்வின் பிலிப் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். கடைசியாக இவரது நடிப்பில் வெளியான தலவன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புத்தக வாசிப்பு குறித்து மியா ஜார்ஜ் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியதாவது: சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்புதான் வாசிப்பில் தீவிர ஆர்வம் ஏற்பட்டது. ஸ்கிரீன் டைமைக் குறைத்து, நேரத்தை வீணாக்காமல் பயனுள்ளதாக மாற்ற வேண்டும் என்பதே எனது முக்கிய நோக்கமாக இருந்தது. அதனால் அர்த்தமுள்ள புத்தகங்களை வாசிக்க முடிவு செய்தேன்.
தொடக்கத்தில் மனதை மகிழ்விக்கும் ‘ஃபீல் குட்’ புத்தகங்களை வாசித்தேன். அதன் பிறகு, எனக்கு பிடிக்காது என நினைத்திருந்த சுய முன்னேற்றம் தொடர்பான புத்தகங்களையும் படிக்கத் தொடங்கினேன். ஒவ்வொரு ஆண்டும் புதிய புத்தகங்களைத் தேடி வாங்கி வாசிப்பது எனக்கு ஒரு பழக்கமாகிவிட்டது. புத்தகங்களை அடுக்கி வைத்திருப்பதும் எனக்கு பிடிக்கும். பயணத்திற்குச் செல்லும் போதுகூட என்னுடன் ஒரு புத்தகம் இருப்பது வழக்கம். தற்போது புத்தக வாசிப்பு எனக்கு ஒரு தீவிரமான பழக்கமாக மாறிவிட்டது. 2025ஆம் ஆண்டில் மட்டும் 36 புத்தகங்களை வாசித்துள்ளேன். மாதத்திற்கு சராசரியாக 3 புத்தகங்கள். தாமதமாக வாசிப்பைத் தொடங்கிய ஒருவருக்கு இது நல்ல முன்னேற்றம்தான் என்று அவர் பதிவிட்டுள்ளார்.
