‘லோகா அத்தியாயம் 1: சந்திரா’ திரைப்படத்தின் மூலம் இந்திய அளவில் பரவலாக அறியப்பட்ட நடிகையாக உயர்ந்தவர் கல்யாணி பிரியதர்ஷன். சூப்பர் ஹீரோயின் கதாபாத்திரத்தில் அவர் நடித்த இந்த படம் பல மொழிகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்த வெற்றியைத் தொடர்ந்து, பல மொழிகளில் இருந்து தொடர்ந்து புதிய பட வாய்ப்புகள் கிடைத்து வருவதாக கல்யாணி தெரிவித்துள்ளார். சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் அவர் பேசுகையில், “எந்த மொழியாக இருந்தாலும், ஒரு நல்ல கதை கிடைத்தால் அதில் நடிக்க நான் எப்போதும் தயாராக இருக்கிறேன். மராத்தி, இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என எந்த மொழியையும் நான் தடையாக பார்த்ததில்லை” என்று கூறியுள்ளார்.
மேலும், “கதை சொல்லல் என்பது உலகம் முழுவதும் அனைவரையும் இணைக்கும் ஒரு பொதுவான உணர்ச்சி. ஒரு படத்தில் நடிக்கும்போது, அதற்காக என் முழு நேரத்தையும், மனதையும் அர்ப்பணிக்க விரும்புகிறேன்” என்றும் கல்யாணி பிரியதர்ஷன் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
