விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் பெறுவதில் சிக்கல் தொடரும் நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நடிகரும் எம்பியுமான கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்,

அதில்,’கலைக்காக, கலைஞர்களுக்காக, அரசியலமைப்புச் சட்டத்திற்காக…இந்திய அரசியலமைப்புச் சட்டம் கருத்துச் சுதந்திரத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது; அது பகுத்தறிவால் வழிநடத்தப்படுவதே தவிர, ஒளிவுமறைவற்ற தன்மையால் என்றுமே மங்கச் செய்யப்படுவதில்லை. தற்போதைய சூழல் என்பது ஏதோ ஒரு குறிப்பிட்ட திரைப்படத்திற்கான பிரச்சனை மட்டுமல்ல; ஒரு அரசியலமைப்பு ஜனநாயகத்தில், கலைக்கும் கலைஞர்களுக்கும் நாம் அளிக்கும் இடத்தைப் பிரதிபலிப்பதாக இது அமைந்துள்ளது.
திரைப்படம் என்பது ஒரு தனிநபரின் உழைப்பு மட்டுமல்ல. அது எழுத்தாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள், திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் சிறு வணிகர்கள் உள்ளடங்கிய ஒரு சூழலியலின் கூட்டு முயற்சியாகும். இவர்களின் வாழ்வாதாரம் நேர்மையான மற்றும் காலதாமதமற்ற வழிமுறையைச் சார்ந்தே உள்ளது.
தெளிவற்ற நிலை நிலவும்போது, படைப்பாற்றல் முடக்கப்படுகிறது; பொருளாதார நடவடிக்கைகள் தடைபடுகின்றன. பொதுமக்களின் நம்பிக்கை பலவீனமடைகிறது. தமிழக மற்றும் இந்தியத் திரைப்பட ரசிகர்கள் கலையின் மீது ஆர்வமும், பகுத்தறியும் திறனும், முதிர்ச்சியும் கொண்டவர்கள்; அவர்கள் வெளிப்படைத்தன்மையையும் மரியாதையையும் பெறத் தகுதியானவர்கள்.
தற்போது தேவைப்படுவதெல்லாம், சான்றிதழ் வழங்கும் நடைமுறைகளை கொள்கை ரீதியாக மறுஆய்வு செய்வதே ஆகும். சான்றிதழ் வழங்குவதற்கு வரையறுக்கப்பட்ட காலக்கெடு, வெளிப்படையான மதிப்பீடு மற்றும் பரிந்துரைக்கப்படும் ஒவ்வொரு வெட்டுக்கும் அல்லது மாற்றத்திற்கும் எழுத்துப்பூர்வமான, காரணங்களுடன் கூடிய விளக்கம் ஆகியவை அவசியம்.
ஒட்டுமொத்தத் திரைத்துறையும் ஒன்றிணைந்து, நம் அரசு அமைப்புகளுடன் அர்த்தமுள்ள, ஆக்கப்பூர்வமான உரையாடலில் ஈடுபட வேண்டிய தருணம் இது. இத்தகைய சீர்திருத்தங்கள் படைப்புச் சுதந்திரத்தைப் பாதுகாப்பதோடு, அரசியலமைப்பு விழுமியங்களை நிலைநிறுத்தி, கலைஞர்கள் மற்றும் மக்கள் மீது நம்பிக்கையை உறுதிப்படுத்துவதன் மூலம் இந்தியாவின் ஜனநாயக அமைப்புகளை வலுப்படுத்தும்.
இப்படிக்கு, கமல்ஹாசன் – என பதிவிட்டுள்ளார்.
