சென்சார் தொடர்பான சர்ச்சைகள் குறித்து, தலைவர் தம்பி தலைமையில் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் ஜீவா தனது கருத்துகளை பகிர்ந்துள்ளார். நடிகர் ஜீவா தற்போது தனது 45-வது திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இயக்குநர் நிதிஷ் சஹதேவ் இயக்கியுள்ள இந்த படத்திற்கு தலைவர் தம்பி தலைமையில் என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் முதல் போஸ்டர் வெளியானதும் அது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருந்தது.

இந்த திரைப்படத்தில் நாயகியாக நடிகை பிரார்தனா நடித்துள்ளதுடன், தம்பி ராமையா, இளவரசு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற ஜனவரி 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனை முன்னிட்டு, இன்று தலைவர் தம்பி தலைமையில் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ஜீவா, சென்சார் தொடர்பான அனுபவங்களை சுவாரசியமாக பகிர்ந்தார். அவர் பேசும்போது, “நான் தான் சென்சாரின் பிராண்ட் அம்பாசிடர் போல ஆகிவிட்டேன். நான் நடித்த ஜிப்சி படத்தில் மட்டும் 48 கட் இருந்தது. என்னையே வைத்து தான் சென்சார் சோதனை செய்தார்கள். எல்லா பிரச்சனைகளும் முடிந்து படம் வெளிவரும்போது, கொரோனா காலத்தில் மாட்டிக்கொண்டோம்” என கூறி பார்வையாளர்களை சிரிக்க வைத்தார்.
