மலையாள திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக அறியப்படும் ஜீத்து ஜோசப், தனது ‘திரிஷ்யம்’ திரைப்படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகங்கள் மூலம் தமிழ் ரசிகர்கள் மட்டுமின்றி, தென்னிந்திய அளவிலும் தனக்கென ஒரு வலுவான ரசிகர் வட்டத்தை உருவாக்கியுள்ளார். அந்த வெற்றியின் தொடர்ச்சியாக, தற்போது ‘திரிஷ்யம் – 3’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகளை தீவிரமாக நடத்தி வருகிறார். இந்த படம் வருகிற அக்டோபர் மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், அதற்கு முன்னதாகவே குறைந்த பட்ஜெட்டில் உருவான ஒரு திரைப்படத்தை அவர் இயக்கி முடித்துள்ளார். பிரபல மலையாள நடிகர்களான பிஜு மேனன் மற்றும் ஜோஜூ ஜார்ஜ் இருவரையும் கதாநாயகர்களாக கொண்டு, ‘வலது வசத்தே கள்ளன்’ என்ற திரைப்படத்தை ஜீத்து ஜோசப் இயக்கியுள்ளார்.
இந்த திரைப்படம் வரும் ஜனவரி 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. நீதிமன்றம் மற்றும் அதன் தீர்ப்புகள் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தை மையமாக வைத்து, ஜீத்து ஜோசப்பின் வழக்கமான பாணியில் சில எதிர்பாராத திருப்பங்களுடன் இந்த கதை உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
