தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக பிரகாசித்து வரும் கீர்த்தி ஷெட்டி, நடிகர் கார்த்திக்கு ஜோடியாக ‘வா வாத்தியார்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைக்கவுள்ளார். இதனைத் தொடர்ந்து, பிரதீப் ரங்கநாதனுடன் நடித்துள்ள ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ மற்றும் ரவி மோகனுடன் நடித்துள்ள ‘ஜீனி’ ஆகிய திரைப்படங்களும் அடுத்தடுத்து வெளியாக தயாராகி வருகின்றன. இதற்கு முன்பாக, லிங்குசாமி இயக்கிய ‘தி வாரியர்’ மற்றும் வெங்கட் பிரபு இயக்கிய ‘கஸ்டடி’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

கீர்த்தி ஷெட்டி, இந்தி சினிமாவில் ‘சூப்பர் 30’ திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர். தற்போது அவர் மீண்டும் பாலிவுட் சினிமாவில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இயக்குநர் மிலாப் மிலன் ஜாவேரி இயக்கத்தில், நடிகர் டைகர் ஷெராப்புடன் இணைந்து ஒரு இந்தி படத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது.
இதுகுறித்து கீர்த்தி ஷெட்டி விளக்கமளிக்கையில், “நான் மும்பையில் பிறந்து வளர்ந்தவள் என்பதால், இந்தியில் நடிப்பது எனக்கு எளிதாக இருக்கும் என்று உணர்கிறேன். தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளைப் போல புதிய மொழியாக கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. இந்தி தெரியும் என்பதால் வசனங்களின் அர்த்தத்தை முழுமையாக புரிந்து கொள்ள முடிகிறது. இந்தியில் சில வாய்ப்புகள் வந்தன. ஆனால் கால்ஷீட் பிரச்சினை காரணமாக அவை ஒப்பந்தமாகவில்லை. இந்தித் திரையுலகில் படப்பிடிப்பு முறைகள் வேறுபட்டவை. அவர்கள் முழு படப்பிடிப்பு அட்டவணையையும் ஒரே நேரத்தில் திட்டமிடுகிறார்கள். ஆனால் தென்னிந்திய சினிமாவில் படப்பிடிப்பை பிரித்து பிரித்து நடத்துவார்கள். இதன் காரணமாக அந்த இந்தி பட வாய்ப்பை ஏற்க முடியாத நிலை ஏற்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.
