தென்னிந்திய மற்றும் இந்தி திரைப்பட உலகில் முன்னணி நடிகையாக திகழும் காஜல் அகர்வால், தென்னிந்திய திரைத்துறையின் பணிச்சூழல் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அவரது கருத்துகள் தற்போது ரசிகர்கள் மற்றும் திரையுலக வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளன.
இதுகுறித்து அவர் கூறுகையில், “தென்னிந்திய திரைப்படத் துறையுடன் எனக்கு எப்போதும் ஒரு தனிப்பட்ட பிணைப்பு உள்ளது. ஏனெனில் எனது திரைப்பயணம் இங்கிருந்துதான் தொடங்கியது. இங்கு பணிபுரிவதில் தனித்துவமான அனுபவம் கிடைக்கிறது. குறிப்பாக வேலை நேரம் ஒழுங்காக நிர்ணயிக்கப்பட்டிருக்கும். பெரும்பாலும் 9 மணி நேரத்திற்கு மேல் பணிகள் நடைபெறாது. நேரத்தை மதிப்பதும், தொழில்முறை ஒழுக்கத்தையும் கடைப்பிடிப்பதும் தென்னிந்திய சினிமாவின் பலமாகும் என்றார்.
மேலும், “பாலிவுட்டில் எனக்குக் கிடைக்காத ஒரு விதமான மரியாதையும் சவுகரியமும் தென்னிந்திய திரைத்துறையில் கிடைக்கிறது. குறிப்பாக பெண்களுக்கு இங்கு அதிக முக்கியத்துவமும் பாதுகாப்பும் வழங்கப்படுகிறது. மரியாதையான மற்றும் பாதுகாப்பான பணிச்சூழல் இருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
