கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான யாஷ், தனது 19-வது திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்திற்கு ‘டாக்ஸிக்’ என பெயரிடப்பட்டுள்ளது. பிரபல நடிகையும் இயக்குநருமான கீது மோகன் தாஸ் இந்த திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதில் கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, நயன்தாரா, ருக்மிணி வசந்த் உள்ளிட்ட பல நட்சத்திர நடிகைகள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படம் மார்ச் 19-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

சமீபத்தில் ‘டாக்ஸிக்’ படத்திலிருந்து கியாரா அத்வானி மற்றும் ஹுமா குரேஷியின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன. அதனைத் தொடர்ந்து நயன்தாராவின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதும் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றது. கன்னடம் மற்றும் ஆங்கில மொழிகளில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாக இருக்கிறது. முழுக்க ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இப்படத்தில், ‘பாஸ்ட் அண்ட் பியூரியஸ்’, ‘ஜான் விக்’ போன்ற ஹாலிவுட் படங்களில் பணியாற்றியுள்ள பிரபல ஸ்டன்ட் இயக்குநர் ஜே.ஜே. பெர்ரி, சண்டைக் காட்சிகளை அமைத்துள்ளார்.
இதுகுறித்து இயக்குநர் கீது மோகன் தாஸ் கூறும்போது, “நயன்தாராவை ஒரு சிறந்த நட்சத்திரமாகவும், வலிமையான திரைப்பட முன்னணி ஆளுமையாகவும் நாம் அனைவரும் அறிவோம். ஆனால் ‘டாக்ஸிக்’ படத்தில், இதுவரை நாம் பார்க்காத ஒரு புதிய பரிமாணத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார். அவர் திரையில் நடிக்கவில்லை; அந்தக் கதாபாத்திரமாகவே மாறிவிட்டார். அவரது ஆழம், நேர்மை, உணர்ச்சி அனைத்தும் அந்த கதாபாத்திரத்தின் இயல்பாகவே இருந்தது. அந்த தருணத்தில் தான் எனக்கு உண்மையான ‘கங்கா’ கிடைத்தார். அதைவிட மகிழ்ச்சியான விஷயம், அந்த பயணத்தில் ஒரு நெருங்கிய நண்பரையும் நான் பெற்றேன்” என்று தெரிவித்துள்ளார்.
