நகைச்சுவை நடிகர் சதீஷ், கடந்த சில ஆண்டுகளாக பிற நடிகர்களின் படங்களில் வழக்கமான நகைச்சுவை கதாபாத்திரங்களில் தோன்றுவதைத் தவிர்த்து, கதைக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களைத் தேர்வு செய்து கதையின் மைய நாயகனாக நடித்து வருகிறார். ‘கூகுள் குட்டப்பா’, ‘கார்டியன்’ ஆகிய படங்களை இயக்கிய குரு சரவணன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படத்தில், சதீஷ் மற்றும் ஆதி சாய்குமார் ஆகிய இருவரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு, இந்த படத்திற்கு ‘பத்து நாள் ராஜா’ என தலைப்பு வைத்துள்ளதாக, முதல் பார்வை போஸ்டருடன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில், சட்டையில் பல இடங்களில் ரத்தக் கரைகள் படிந்த நிலையில், ஒரு கையில் காய்கறி பை மற்றும் மற்றொரு கையில் சாப்பாட்டு பையை ஏந்தியபடி, கண்ணாடி அணிந்து சதீஷ் முற்றிலும் புதிய தோற்றத்தில் காட்சியளிக்கிறார்.
இந்த படத்தில் மலையாள நடிகை சரண்யா கதாநாயகியாக நடித்துள்ளார். இதேபோல், சரவணன், சிங்கம் புலி, பிளாக் பாண்டி, தங்கதுரை உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
