திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ரெயில் நிலையம் அருகே, வடமாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரை சில சிறார்கள் பட்டாக்கத்தியால் கண்மூடித்தனமாக தாக்கும் சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி, தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து, பொதுமக்களிடையே கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

இந்த நிலையில், பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் இதுகுறித்து வேதனையுடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அவர், “சென்னையில் நான் வசித்து வரும் பகுதி, போதைப்பொருளுக்கு அடிமையான குண்டர்கள் மற்றும் குற்றவாளிகளால் மிகவும் அபாயகரமான இடமாக மாறி வருகிறது. என் ஸ்டுடியோ சுற்றுவட்டாரத்தில் பணியாற்றும் பல அப்பாவி கட்டுமானத் தொழிலாளர்கள் சமீப காலமாக தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர். இந்த தாக்குதல்களில் ஈடுபடுபவர்களில் பலர் இனவெறியை பெருமையாக கருதி, மற்ற மாநிலங்களை சேர்ந்த மக்களை குறிவைத்து தாக்குகின்றனர்.
இத்தகையவர்களுக்கு ஆதரவாக சில உள்ளூர் அரசியல் குழுக்களும், சாதி அடிப்படையிலான அமைப்புகளும் செயல்படுவது மிகுந்த வேதனையை அளிக்கிறது. உண்மை நிலையை புரிந்து கொண்டு, பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற அனைவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டிய தருணம் இது என்று தெரிவித்துள்ளார்.
