மலையாள நடிகர் நிவின் பாலி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், திரைப்படங்களின் லாப–நட்ட கணக்குகளை வெளிப்படையாக அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தனது கருத்தை தெரிவித்துள்ளார். இது தேவையற்ற ஒன்று என்றும் அவர் கூறியுள்ளார்.

நிவின் பாலி நடிப்பில் அகில் சத்யன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சர்வம் மாயா’ திரைப்படம், நேற்று கிறிஸ்துமஸ் வெளியீடாக திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நிவின் பாலி துபாய் சென்றிருந்தார். அங்கு பத்திரிகையாளர்களுடன் உரையாடியபோது, கடந்த 2025ஆம் ஆண்டில் வெளியான மலையாள திரைப்படங்களின் லாப–நட்ட விவரங்கள் அடங்கிய பட்டியல் சமீபத்தில் வெளியானது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த நிவின் பாலி, “இவ்வாறு லாப–நட்ட கணக்குகளை பொதுவெளியில் அறிவிப்பது முற்றிலும் தேவையற்றது. இதற்கு முன்பு இப்படியான நடைமுறை இருந்ததில்லை. இவ்வாறு அறிவிப்பது சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். மேலும், புதிதாக திரைப்படம் தயாரிக்க விரும்பி வரும் தயாரிப்பாளர்களையும் தயக்கத்தில் ஆழ்த்தும். ஒரு படத்தின் லாப–நட்ட விவரங்கள் அந்தப் படத்தை சார்ந்தவர்களுக்குள் மட்டுமே இருப்பதே சினிமா துறைக்கு நல்லது. இந்த நடைமுறை அனைத்து திரையுலகங்களிலும் பின்பற்றப்பட வேண்டும். அதற்கு மலையாளத் திரையுலகம் முன்னோடியாக இருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
