Touring Talkies
100% Cinema

Saturday, April 19, 2025

Touring Talkies

‘டென் ஹவர்ஸ்’ திரைப்படம் எப்படி இருக்கு? – திரைவிமர்சனம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சென்னையிலிருந்து கோயம்புத்தூருக்கு 25 பயணிகளுடன் ஒரு ஆம்னி பேருந்து புறப்பட்டு செல்கிறது. அந்த பேருந்து சேலம் அருகே சென்று கொண்டிருந்த நேரத்தில், நள்ளிரவில் அந்த பஸ்ஸில் ஒரு கொலை நடைபெறுகிறது. இதே நேரத்தில், சேலம் ஆத்தூர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றும் சிபிராஜ் சபரிமலைக்கு மாலை கட்டி, அன்றிரவு கோவிலுக்குச் செல்ல தயாராக இருக்கிறார். அப்போது, ஒரு பெண் காணவில்லை என்ற தகவல் காவல் நிலையத்திற்கு தொலைபேசியில் வருகிறது. உடனடியாக அந்த வழக்கில் சிபிராஜ் விசாரணையை தொடங்குகிறார். அதற்குப் பிறகு அந்த ஆம்னி பேருந்தில் நடந்த கொலை சம்பவம் குறித்த தகவலும் அவருக்கு தெரிய வருகிறது. அதன் பின்னர், அடுத்த 10 மணி நேரத்தில் தொடர்ச்சியாக பல கொலைகள் நிகழ்கின்றன. இந்த தொடருக்குப் பின்னால் உள்ள காரணம் என்ன? யார் அந்த கொலையாளி? இந்த கொலைகளைச் செய்வதற்கான நோக்கம் என்ன? இவற்றை இன்ஸ்பெக்டர் சிபிராஜ் எப்படிச் சுட்டிகாட்டினார் என்பதே இப்படத்தின் மீதிக்கதையாகும்.

பொதுவாகவே சஸ்பென்ஸ் மற்றும் திரில்லர் வகை திரைப்படங்கள் ரசிகர்களிடையே எப்போதும் பெரும் வரவேற்பைப் பெறுகின்றன. அந்த வகையில், இயக்குநர் இளையராஜா கலியபெருமாள், “ஓடும் பஸ்ஸில் ஒரு கொலை” என்ற புதிய மற்றும் வித்தியாசமான கதையை மையமாகக் கொண்டு, ரசிகர்களுக்கு ரசிக்கத்தக்க ஒரு படத்தை வழங்கியிருக்கிறார். ஒரே இரவில், ஒரே பேருந்தில், 25 பயணிகளுடன் நடக்கும் சம்பவங்கள், அடுத்து என்ன நடக்கப்போகிறது என யூகிக்க முடியாத வகையில் மிகுந்த பரபரப்புடன் கதையை நகர்த்தியிருக்கிறார். இந்த படத்தில் ஹீரோயின் கிடையாது, பாடல்கள் கூட இல்லாமல் கதையை முழுமையாக சஸ்பென்ஸ் மற்றும் திரில்லராக நகர்த்தியிருப்பது ஒரு சிறப்பாக அமைந்துள்ளது. சிபிராஜ் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு வித்தியாசமான கதையில் மிகச் சிறப்பாகச் சாகசங்களைச் செய்திருக்கிறார்.

சபரிமலைக்கு மாலை கட்டிய போலீசாக சிபிராஜ் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கதையின் முழுப் பாரத்தை தனக்கேற்றவாறு சுமந்திருக்கிறார். நெற்றியில் பட்டை, கழுத்தில் மாலை ஆகிய மாற்றப்பட்ட போலீஸ் தோற்றத்தில் அவர் நடிக்கும் துப்பறியும் காட்சிகள் பார்வையாளர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்குகின்றன. இது அவரது திரும்பிப்பார்க்கக்கூடிய படமாக அமையும். சப்-இன்ஸ்பெக்டராக கஜராஜ் நடித்துள்ள வசனங்கள் படத்திற்கு மேலும் வலுவாக அமைந்துள்ளன. டாக்டராக ஜீவாரவி, பேருந்து கிளீனராக முருகதாஸ் மற்றும் திலீபன், உதயா, சரவண சுப்பையா, சருமிஷா, நிரஞ்சனா ஆகியோரும் தங்கள் பங்களிப்புகளை சிறப்பாக வழங்கியுள்ளனர். பரபரப்பாக ஓடுகிற கதைக்குள் இடைவேளைகளில் தங்கதுரை வழங்கும் காமெடி நம்மை சிரிக்க வைக்கிறது. ஒளிப்பதிவாளர் ஜெய் கார்த்திக் காட்சிகளை மிக அழகாக பதிவு செய்திருக்கிறார். குறிப்பாக ஒரு பேருந்துக்குள் நிகழும் காட்சிகள் எல்லாம் கதையின் ருசியை உணர்த்தும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கே.எஸ். சுந்தரமூர்த்தியின் பின்னணி இசை, கதையுடன் நம்மை பயணிக்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது.

ஒரு இரவு, ஒரு பேருந்து, ஒரு கொலை என சஸ்பென்ஸ் கலந்த திரில்லரை பரபரப்புடன் கூறியிருப்பது மிகவும் பாராட்டப்பட வேண்டியது. மேலும், இரவுப் பேருந்து பயணத்தின் உணர்வை திரைக்கதையில் பிரதிபலித்திருப்பது இயக்குநரின் திறமையை வெளிக்கொணருகிறது. அவருக்கு ஒளிப்பதிவாளர் மற்றும் இசையமைப்பாளர் ஆகியோர் உறுதுணையாக இருந்திருப்பதைக் காணலாம். இதில் கதாநாயகி மற்றும் பாடல்கள் இல்லாமல் படம் எடுக்கப்பட்டிருப்பது, கதையின் வலிமையை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.

- Advertisement -

Read more

Local News