தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் நடிகராகவும், தமிழில் இயக்குனராகவும் இயங்கி வருபவர் தனுஷ். அவரது இயக்கத்தில் ‛ப பாண்டி’, ‛ராயன்’, ‛நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ ஆகிய திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. தற்போது அவர் இயக்கி நடித்து வரும் படம் ‛இட்லி கடை’. அவர் நடித்துள்ள ‛குபேரா’ திரைப்படம், ஜூன் 20ம் தேதி பான் இந்தியா படமாக திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. அதில் பேசிய தனுஷ், பவன் கல்யாண் நடிக்கும் ஒரு திரைப்படத்தை இயக்க வேண்டும் என்பது தனது நீண்ட நாள் கனவாக இருப்பதைத் தனுஷ் வெளிப்படையாகத் தெரிவித்தார். இதுவரை தமிழில் மட்டுமே படங்களை இயக்கியுள்ள தனுஷ், முதல்முறை தெலுங்கு மொழி படத்தை இயக்க விருப்பம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தற்போது பவன் கல்யாண் ஆந்திர மாநில துணை முதல்வராக பணியாற்றி வருகிறார். மேலும், ‛ஹரிஹர வீர மல்லு’, ‛ஓஜி’ ஆகிய படங்களில் நடித்து முடித்து, தற்போது ‛உஸ்தாத் பகத்சிங்’ படத்தில் நடித்து வருகிறார்.