தென்னிந்திய திரையுலகில் இயக்குநராகவும், நடிகராகவும் பிரபலமானவர் சுந்தர் சி. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முப்பது படங்களுக்கு மேல் இயக்கியுள்ளார். தனது திரைப்பயணத்தை மணிவண்ணனிடம் உதவி இயக்குநராக தொடங்கியவர், பின்னர் குடும்ப படமான ‘முறை மாமன்’ மூலம் இயக்குநராக அறிமுகமானார்.

அவரது சமீபத்திய இயக்கங்களில் ‘அரண்மனை 4’ மற்றும் ‘மதகஜராஜா’ ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது. இதையடுத்து பல முன்னணி நடிகர்கள் அவரிடம் கதைகள் கேட்டு வருகின்றனர். தற்போது சுந்தர் சி இயக்கி நடித்துள்ள புதிய படம் ‘கேங்கர்ஸ்’, மே மாதம் வெளியாகிறது. தற்போது அவர் ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தையும் இயக்கி வருகிறார்.
இந்நிலையில், சுந்தர்-சியும் நடிகர் கார்த்தியும் நேரில் சந்தித்ததாகவும் அப்போது சுந்தர் சி, கார்த்திக்கு ஒரு கதையை கூற, அந்த கதை கார்த்திக்கு மிகவும் பிடித்துப் போனதாக கூறப்படுகிறது. அதன் காரணமாக, சுந்தர் சி இயக்கத்தில் கார்த்தி புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த கூட்டணியில் உருவாகும் படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும், இந்த வருடம் டிசம்பரில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.