தமிழில் ஆதி, நிக்கி கல்ராணி நடிப்பில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘மரகத நாணயம்’. இயக்குனர் ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில் வெளியான இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. பேண்டஸி காமெடி படமாக உருவான இந்த படத்தை ஆக்சஸ் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்திருந்தது.

இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக இயக்குனர் ஏ.ஆர்.கே.சரவணன் ஏற்கனவே தெரிவித்திருந்தார். மேலும், முதல் பாகத்தை தயாரித்த ஆக்சஸ் பிலிம் பேக்டரி இந்த பாகத்தை தயாரிக்கவுள்ளதாகவும் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில், நடிகர் ஆதி ‘மரகத நாணயம்’ பட இயக்குனருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அதன்படி, ஆதி, நிக்கி கல்ராணி மற்றும் ஏ.ஆர்.கே.சரவணன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த அவர், ‘மரகதநாணயம் 2 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருப்பதாக’ தெரிவித்திருக்கிறார்.