ரவி மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ‘கராத்தே பாபு’ திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இதனுடன் ‘ப்ரோ கோட்’, ‘பென்ஸ்’ உள்ளிட்ட படங்களிலும் அவர் நடித்து வருகிறார். மறுபுறம், ‘ஆன் ஆர்டினரி மேன்’ படத்தின் மூலம் இயக்குநராகவும் புதிய பயணத்தை தொடங்கியுள்ளார். இப்படத்தில் யோகி பாபு கதாநாயகனாக நடிக்க, ரவி மோகனே தயாரிப்பையும் மேற்கொள்கிறார்.
இந்நிலையில், ரோமியோ பிக்சர்ஸ் தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் ரவி மோகன் கதாநாயகனாக நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜிஎன்டி ஷியாகுமார் இயக்கும் இப்படம், 2027-ம் ஆண்டு கோடை காலத்தில் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
படத்தின் அறிவிப்பு போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கருப்பு-வெள்ளை தோற்றத்தில் வெளியாகியுள்ளது. அதில் ‘இங்க் மற்றும் ரத்தத்தால் உருவான உலகம்’ என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது. இந்த வித்தியாசமான போஸ்டர் காரணமாக, ரவி மோகனின் அடுத்த படம் கிரைம் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகிறதா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
