இளையராஜாவின் இசையும் ராமராஜனின் நடிப்பும் இணைந்த படங்களை ரசித்த ரசிகர்களுக்கு நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இருவரும் மீண்டும் இணையும் திரைப்படத்திற்கு ‘கடவுள் தந்த பரிசு’ என பெயரிடப்பட்டுள்ளது.
படத்தின் பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. முதற்கட்டமாக பாடல் பதிவு நடைபெற்றுள்ள நிலையில், தற்போது படப்பிடிப்புக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதன்மூலம் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட இளையராஜா – ராமராஜன் கூட்டணி மீண்டும் திரையில் இணையவுள்ளது. புதுமுக இயக்குநர் காசிமாயன் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். கதையையும் திரைக்கதையையும் அவரே எழுதுகிறார். நகைச்சுவைப் பகுதிகளை ராஜகோபால் கவனிக்க, வசனப் பணியை ராஜகோபால் மற்றும் எம்.அடைக்கலம் இணைந்து மேற்கொள்கின்றனர்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு செந்திலும் கோவை சரளாவும் ராமராஜனுடன் இணைந்து நடிக்கின்றனராம். இவர்களின் கூட்டணி படத்தில் ரசிகர்களை சிரிக்க வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. திரையுலகில் தனது 50-வது ஆண்டில் பயணித்து வரும் இளையராஜா, மீண்டும் ராமராஜனுடன் இணைந்திருப்பது இந்தப் படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரித்துள்ளது. ரசிகர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் உருவாகும் ‘கடவுள் தந்த பரிசு’ படத்தின் அடுத்தகட்ட பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகின்றன.
