இயக்குனர் பிஎஸ் மித்ரன் – கார்த்தி கூட்டணியில் உருவாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் சர்தார்(2022). தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
சமீபத்தில் இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கார்த்தி,உளவுத் திரைப்படங்கள் இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் உருவாகாத நிலையில், அப்படியொரு கதையை உருவாக்குவதும் சவாலான விஷயம் என அவர் கூறியுள்ளார். இந்தப் படத்தில் கதாநாயகன் வேட்டி அணிந்த உளவாளியாக இருப்பார் என்று பி.எஸ்.மித்ரன் கூறியபோதே அந்தக் கதாபாத்திரம் தன்னை கவர்ந்ததாக கார்த்தி தெரிவித்துள்ளார்.
வரலாற்றில் ரவீந்திர கவுஷிக் போன்றவர்கள் வேறு அடையாளத்தில் இருந்து செயல்பட்ட சம்பவங்கள் இருப்பதை சுட்டிக்காட்டிய கார்த்தி, உண்மையான உளவாளிகளின் வாழ்க்கை எவ்வளவு வித்தியாசமானது என்பதையும் படத்தின் கதை பிரதிபலிக்கும் என தெரிவித்துள்ளார். அந்த யதார்த்தமான அம்சங்கள்தான் ‘சர்தார் 2’ படத்தை தனக்கு சுவாரஸ்யமாக மாற்றியதாகவும் கூறியுள்ளார்.
முதல் பாகத்தின் கதையை அப்படியே தொடராமல், ‘சர்தார்’ மீண்டும் வருவதற்கான வலுவான காரணத்தை இயக்குநர் உருவாக்கியிருப்பதாக கார்த்தி தெரிவித்துள்ளார். அதோடு எஸ்.ஜே.சூர்யாவுக்காக வலுவான வில்லன் கதாபாத்திரமும் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். படத்தின் முழு கதையையும் தற்போது வெளிப்படுத்த முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.காட்சியமைப்பிலும் ‘சர்தார் 2’ பெரிய அளவில் இருக்கும் என கார்த்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார். சமீபத்தில் வெளியான ‘துரந்தர்’ உளவு திரைப்படமாக இருந்தாலும், அதன் கதை மற்றும் பின்னணி வேறுபட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த வகையில் தென்னிந்தியாவிலும் தரமான ஸ்பை படங்களை உருவாக்க முடியும் என்பதை ‘சர்தார் 2’ காட்டும் என தெரிவித்துள்ளார்.
