கிரேக்கக் கவிஞர் ஹோமரின் புகழ்பெற்ற ‘தி ஒடிசி’ காவியத்தை அடிப்படையாகக் கொண்டு இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் உருவாக்கிய திரைப்படம் ‘தி ஒடிசி’. மிகப்பெரிய சவால்களுக்கு மத்தியில் முழுமையாக ஐமேக்ஸ் கேமராக்களைப் பயன்படுத்தி படமாக்கப்பட்ட இப்படம், அதிக எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஜூலை 17ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.
தொழில்நுட்ப ரீதியாகப் பலரையும் வியக்க வைத்தாலும், திரைக்கதை தொடர்பாக இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில், இயக்குநர் அட்லீ ‘தி ஒடிசி’ திரைப்படம் குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். ஒரு சில திரைப்படங்கள் மட்டுமே பார்வையாளர்களை திரையரங்க அனுபவத்தைத் தாண்டி வேறொரு உலகத்திற்குள் அழைத்துச் செல்லும் என்றும், அந்த வகையில் ‘தி ஒடிசி’ தனக்கு மிகச் சிறப்பான அனுபவத்தை வழங்கியதாகவும் அட்லீ குறிப்பிட்டுள்ளார்.
கிறிஸ்டோபர் நோலனின் கதை சொல்லும் விதம் பிரமிக்க வைப்பதாகவும், ஒவ்வொரு காட்சியும் தனக்கென ஒரு மொழியில் பேசுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கேமரா வெறும் காட்சிகளைப் பதிவு செய்யாமல், கதையின் ஒரு முக்கிய கதாபாத்திரமாகவே மாறியிருப்பதாகவும் பாராட்டியுள்ளார்.மேலும், லுட்விக் கோரன்சனின் இசை பின்னணி இசையாக மட்டுமே இல்லாமல், பார்வையாளர்களின் உணர்வுகளுடன் கலந்துவிடும் வகையில் அமைந்துள்ளதாகவும் அட்லீ தெரிவித்துள்ளார். ஒட்டுமொத்த திரையரங்க ரசிகர்களும் ஒரு திரைப்படத்தில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ளும் அந்த தருணமே உண்மையான ‘எபிக்’ அனுபவம் என்றும், ‘தி ஒடிசி’ தனக்கு அப்படிப்பட்ட திரைப்படமாக இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
