‘கே.ஜி.எஃப்’ திரைப்படத்தின் மூலம் இந்திய அளவில் தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய நடிகர் யாஷ், தற்போது Toxic திரைப்படத்தின் மூலம் மீண்டும் ரசிகர்களை சந்திக்கத் தயாராகி வருகிறார். கீது மோகன்தாஸ் இயக்கியுள்ள இப்படம் ஆகஸ்ட் 26ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதில் கியாரா அத்வானி, தாரா சுதாரியா, ருக்மிணி வசந்த், நயன்தாரா மற்றும் ஹுமா குரேஷி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அறிவிப்பு வெளியானது முதல் டிரைலர் வெளியாகும் வரை பல்வேறு சர்ச்சைகளையும் இப்படம் எதிர்கொண்டது. குறிப்பாக, யாஷ் – நடிகைகளுக்கிடையேயான நெருக்கமான காட்சிகள் பேசுபொருளான நிலையில், கன்னட நடிகை ரிஷிகா சிங் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வீடியோ வெளியிட்டிருந்தார்.
இதனிடையே தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற யாஷிடம், படங்களில் நடிகைகளுடன் நெருக்கமான காட்சிகளில் நடிப்பதை அவரது மனைவி ராதிகா எப்படி எடுத்துக்கொள்வார் என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “கணவர் இதுபோன்ற காட்சிகளில் நடிப்பதை எந்த மனைவியும் எளிதாக ஏற்றுக்கொள்ள மாட்டார் என்று நினைக்கிறேன். நான் பொய் சொல்ல விரும்பவில்லை. வாழ்க்கைத் துணைக்கு அந்த உணர்வு இருப்பது இயல்புதான். ஆனால், இவை அனைத்தும் உருவாக்கப்பட்ட காட்சிகள். இது ஒரு கலை. அதன் மூலம் நாம் என்ன சொல்ல விரும்புகிறோம் என்பதுதான் முக்கியம்” என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து தனது பேசிய யாஷ், “நெருக்கமான காட்சிகளில் நடிப்பது எனக்கும் அசௌகரியமாகவே இருக்கும். இதுபோன்ற காட்சிகளில் நடிப்பது எனக்கு ஒன்றும் எளிதான விஷயம் கிடையாது. ஆனால், கதைக்கு அது தேவையாக இருக்கும்போது ஒரு நடிகராக அதை செய்ய வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அந்தக் காட்சிகளில் என்னைப் பார்க்கும்போது என் மனைவிக்கும் நிச்சயம் சங்கடமாக இருக்கும். அதற்காக அவர் அதை தவறாக புரிந்துகொள்வார் என்று அர்த்தமில்லை. அவர் என் மீது முழு நம்பிக்கை வைத்திருக்கிறார். அதைவிட முக்கியமாக அவரும் ஒரு நடிகை என்பதால், இந்தத் தொழிலின் தன்மையை நன்றாகப் புரிந்துகொள்கிறார். திரையில் இருப்பது அவரது கணவன் அல்ல; தனது வேலையைச் செய்யும் ஒரு நடிகர் என்பதும் அவருக்குத் தெரியும்” எனக் கூறியுள்ளார்.
—
