இந்தியாவின் “எடிசன்” என்று போற்றப்படும் விஞ்ஞானியும் தொழிலதிபருமான ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவான திரைப்படம் இது. இளம் வயதிலிருந்தே விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்ட ஜி.டி. நாயுடு, சிறிய கருவிகள் மூலம் தொழில்நுட்ப முன்னேற்றத்தை அமைதியாக உருவாக்குகிறார். அதே சமயம், கடின உழைப்பால் தனது பஸ் தொழிலை விரிவுபடுத்தி பெரிய வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்குகிறார்.
அவரது வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாத ஆங்கிலேயர்கள், வருமான வரித்துறை அதிகாரி ஜெயராம் மூலம் அவரை சிக்கலில் சிக்கவைக்க முயல்கிறார்கள். போலி ஆவணங்கள், அதிக வரி மற்றும் சொத்துகளை பறிக்க திட்டமிடப்படும் சூழ்ச்சிகளுக்கு எதிராக அவர் எவ்வாறு போராடுகிறார் என்பதே கதையின் மையம்.
ஜி.டி. நாயுடுவாக நடித்துள்ள மாதவன், அந்த மனிதரை வெறும் நடிப்பால் அல்ல, உடல்மொழி மற்றும் உணர்ச்சிகளால் உயிர்ப்பித்துள்ளார். சந்தோஷம், அவமானம், கோபம், துயரம் என பல நிலைகளில் அவரது நடிப்பு படத்தின் முக்கிய பலமாக மாறுகிறது.சத்யராஜ், ஜெயராம் ஆகியோரின் அனுபவம் படத்திற்கு வலுவூட்டுகிறது. பிரியாமணி, துஷாரா விஜயன், தம்பி ராமையா, அதிதி பாலன், பிரிகிடா, ஷீலா ராஜ்குமார் உள்ளிட்ட அனைவரும் தங்களுக்கான பங்களிப்பைச் சிறப்பாக வழங்கியுள்ளனர். குறிப்பாக கருணாகரன், இதுவரை காணாத எதிர்மறை நிழலுடன் கவனம் ஈர்க்கிறார்.
படத்தின் உணர்வுப்பூர்வமான தருணங்கள் பல இடங்களில் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், சில காட்சிகளுக்கிடையேயான இணைப்பு இன்னும் வலுவாக இருந்திருக்கலாம். சில பகுதிகள் ஆவணப்படத் தன்மையை ஏற்படுத்துகின்றன. இருந்தாலும், ஜி.டி. நாயுடுவின் சாதனைகளை இன்றைய தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் முயற்சியாக இயக்குநர் கிருஷ்ணகுமார் ராமகுமார் பாராட்டுக்குரிய முயற்சி செய்துள்ளார். அரவிந்த் கமலநாதனின் ஒளிப்பதிவும், கோவிந்த் வசந்தாவின் இசையும் அந்தக் காலத்தை கண்முன் நிறுத்துகின்றன.
