கருணாஸ், நிமிஷா சஜயன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘என்ன விலை’ திரைப்படத்தில், ஒய்.ஜி. மகேந்திரன், பூர்ணிமா பாக்யராஜ், மோகன் ராம், சுவாமிநாதன், தீபா சங்கர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மலையாள எழுத்தாளரான சஜீவ் பழூர் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். குடும்பத் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை கலாமயா பிலிம்ஸ் சார்பில் கிதேஷ் வி தயாரித்துள்ளார்.
இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய நடிகர் கருணாஸ், “இந்தப் படம் ராமேஸ்வரத்தை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ளது. மலையாள எழுத்தாளரான சஜீவ் பழூர், தமிழில் படம் இயக்க வேண்டும் என்ற விருப்பத்துடன் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். நான் பல இயக்குநர்களுடன் பணியாற்றியிருக்கிறேன். ஆனால், நடிகர்களிடமிருந்து எந்த மாதிரியான ‘எக்ஸ்பிரஷனை’ பெற வேண்டும் என்பதை மிகவும் தெளிவாக அறிந்து செயல்படும் இயக்குநர் இவர்.
சில திரைப்படங்கள் நடிகர்களுக்கு தனி அடையாளத்தை உருவாக்கித் தரும். அதுபோல, ஒரு நடிகனாக எனக்கும் இந்தப் படம் மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்று நம்புகிறேன். தற்போது சினிமா வியாபார சூழல் எப்படி இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். இருந்தாலும், இந்தத் திரைப்படம் வெளியாகும் முன்பே அதன் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமைகள் விற்பனையாகிவிட்டன.நல்ல திரைப்படங்களை ரசிகர்கள் எப்போதும் ஆதரித்திருக்கிறார்கள். அதேபோல் இந்தப் படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். இதுவரை யாரும் பேசாத ஒரு முக்கியமான விஷயத்தை இந்தப் படம் மையமாகக் கொண்டு பேசுகிறது. இதில் நிமிஷா சஜயன் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்,” என்று கூறினார்.
