நடிகர் யோகி பாபுவின் 300-வது திரைப்படமாக உருவாகியுள்ள படம் ‘அர்ஜுனன் பேர் பத்து’. இப்படத்தில் அனாமிகா மஹி, காளி வெங்கட், அருள்தாஸ், லெனின் பாரதி, சுப்பிரமணியம் சிவா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
ரா. ராஜ்மோகன் எழுதி இயக்கியுள்ள ‘அர்ஜுனன் பேர் பத்து’ திரைப்படத்தை தேவ் சினிமாஸ் நிறுவனம் சார்பில் கிருத்திகா தங்கப்பாண்டி மற்றும் தங்கப்பாண்டி இணைந்து தயாரித்துள்ளனர். இப்படம் வரும் 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இந்த விழாவில் பேசிய யோகி பாபு, “இது எனது 300-வது படம் என்று எப்படிக் கண்டுபிடித்தார்கள் என தெரியவில்லை. ஆனால், இந்த எண்ணிக்கையை வைத்து நாமே ஒரு வரையறையை உருவாக்கிக் கொள்ளக் கூடாது. இன்னும் அதிகமான திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். நான் 2016-ஆம் ஆண்டிலேயே நயன்தாராவுடன் நடித்துவிட்டேன்.இனி எந்த கதாநாயகியுடன் நடிக்க வேண்டும் என்ற கவலையும் எனக்கு இல்லை. நமக்கு கதைதான் முக்கியம், கதாநாயகி அல்ல. ஆற்காடு அருகே உள்ள ஒரு கிராமம்தான் எங்களது பூர்வீகம். ஆனால், நாங்கள் சென்னையில் பிறந்தவர்கள். வெளியூரிலிருந்து வந்தவர்களுக்கு மட்டுமே சினிமாவில் கஷ்டம் இருக்கிறது என்பதில்லை. சென்னையில் பிறந்தவர்களுக்கும் சினிமா கடினமானதுதான். கடந்த 24 ஆண்டுகளாக இந்தத் துறையில் பெற்ற அனுபவத்தின் மூலம் அதை நான் புரிந்துகொண்டேன்” என தெரிவித்துள்ளார்.
