கன்னட திரையுலகை உலக அளவில் கவனிக்க வைத்த திரைப்படங்களில் முக்கியமானது ‘காந்தாரா’. 2022-ஆம் ஆண்டு வெளியான இந்த படம் சுமார் ரூ.16 கோடி பட்ஜெட்டில் உருவாகி, ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து மாபெரும் வெற்றியைப் பெற்றது.
அதனைத் தொடர்ந்து வெளியான ‘காந்தாரா சாப்டர் 1’ சுமார் ரூ.100 கோடி செலவில் உருவாகி, ரூ.800 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அப்படத்தின் இயக்குநரும் கதாநாயகனுமான ரிஷப் ஷெட்டி, அடுத்ததாக ‘காந்தாரா சாப்டர் 2’ படத்திற்கான திரைக்கதை பணிகளில் தனது குழு ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
தற்போது ரிஷப் ஷெட்டி ‘ஜெய் ஹனுமான்’ மற்றும் ‘சத்ரபதி சிவாஜி மகாராஜ்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அந்த படங்களின் பணிகள் முடிந்த பிறகே ‘காந்தாரா சாப்டர் 2’ படப்பிடிப்பு தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. முந்தைய இரண்டு ‘காந்தாரா’ படங்களை தயாரித்த ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவனமா அல்லது ரிஷப் ஷெட்டியின் சொந்த நிறுவனமா இந்த படத்தை தயாரிக்கிறது என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
