தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான லிங்குசாமி, தனது வெற்றிப்படமான ‘ரன்’ திரைப்படம் வரும் ஜூலை 10-ஆம் தேதி ரீ-ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், அந்தப் படம் குறித்து சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார். மாதவன் மற்றும் மீரா ஜாஸ்மின் நடித்த இந்தப் படம், வெளியானபோது மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
ரீ-ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய லிங்குசாமி, ‘ரன்’ திரைப்படத்தை முதலில் நடிகர் விஜய்யை வைத்து இயக்குவதற்காகவே உருவாக்கியதாக தெரிவித்தார். ஏ.வி.எம். நிறுவனத்தின் சார்பில் எஸ்.ஏ. சந்திரசேகரிடம் கதையை கூறியபோது, அப்போது விஜய் வேறு படங்களில் பிஸியாக இருந்ததுடன், “ஒரு பெண்ணின் பின்னால் சுற்றும் காதல் கதையை இப்போது செய்ய வேண்டாம்” என்று எஸ்.ஏ. சந்திரசேகர் கூறியதால் அந்த வாய்ப்பு அமையவில்லை என்றார்.
இதையடுத்து, ‘சண்டக்கோழி’ மற்றும் ‘வேட்டை’ திரைப்படங்களும் முதலில் விஜய்யை மனதில் வைத்தே எழுதப்பட்ட கதைகள் என்றும், பல்வேறு காரணங்களால் அவை அவருடன் இணையாமல் போனதாகவும் லிங்குசாமி தெரிவித்துள்ளார். அவரது இந்தப் பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி, விஜய் ரசிகர்களிடையே பரவலாக பேசப்பட்டு வருகிறது.
