கணேஷ் விநாயக் இயக்கத்தில் அருள்நிதி, ஆரவ், ரம்யா பாண்டியன், காளி வெங்கட் உள்ளிட்டோர் நடித்துள்ள அருள்வான் திரைப்படத்தின் விழா சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய அருள்நிதி, படத்தின் தலைப்பில் தனது பெயர் இடம்பெற்றிருப்பதால் முதலில் நடிக்க யோசித்ததாகவும், பின்னர் இயக்குநரின் கதையை கேட்டு சம்மதித்ததாகவும் தெரிவித்தார்.
முதலில் ஐந்து நாட்கள் கால்ஷீட் கேட்ட இயக்குநர், பின்னர் அதை 10 நாட்களாகவும், இறுதியில் 15 நாட்களாகவும் நீட்டித்ததாக கூறிய அருள்நிதி, நல்ல கதைக்காக கூடுதல் நாட்கள் நடித்ததில் மகிழ்ச்சி இருப்பதாக தெரிவித்தார். மேலும், படத்தில் கல்விக்காக போராடும் சிறுமியாக நடித்துள்ள கிருத்திகாவுக்கே மிக முக்கியமான கதாபாத்திரம் என்றும், தாம் மாவட்ட ஆட்சியராக நடித்திருப்பது தனக்கு மறக்க முடியாத அனுபவம் என்றும் கூறினார்.
நடிகை ரம்யா பாண்டியன் பேசுகையில், ஆரவ் மிகவும் கஷ்டப்பட்டு நடித்ததாக பாராட்டியதுடன், இனி கிராமத்து கதைகளில் நடிக்க மாட்டேன் என்ற தனது முடிவை அருள்வான் கதையே மாற்றிவிட்டதாக தெரிவித்தார்.
—
