இயக்குநர் எஸ்.எஸ். ராஜமவுலி மற்றும் நடிகர் மகேஷ் பாபு கூட்டணியில் உருவாகி வரும் பிரம்மாண்ட திரைப்படம் ‘வாரணாசி’. மிகப்பெரிய பொருட்செலவில் தயாராகி வரும் இந்த படத்தில் மகேஷ் பாபுவுடன் இணைந்து பிரித்விராஜ், பிரியங்கா சோப்ரா மற்றும் பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துவருகின்றனர்.
இந்த திரைப்படத்தின் தயாரிப்பு செலவு ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் வெளிநாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இயக்குநர் ராஜமவுலி, ‘வாரணாசி’ திரைப்படம் குறித்து பேசும்போது, “இந்த படம் பார்வையாளர்களை ஆப்பிரிக்காவின் அடர்ந்த காடுகள், அண்டார்டிகாவின் பனிப்பரப்புகள், ராமாயணத்தில் இடம்பெறும் தெய்வீக உலகம், தேசிய பேரழிவுகள் மற்றும் பிரம்மாண்டமான பேண்டஸி அம்சங்கள் நிறைந்த சாகசப் பயணத்திற்கு அழைத்துச் செல்லும்” என்று தெரிவித்தார்.
மேலும், “இவ்வளவு பிரம்மாண்டமான காட்சிகளும் சாகசங்களும் இடம்பெற்றிருந்தாலும், இந்த திரைப்படத்தின் மையக் கரு தந்தை–மகன் உறவை உணர்வுப்பூர்வமாக பேசுவதாக இருக்கும்” என்றும் ராஜமவுலி கூறியுள்ளார். இதனால் ‘வாரணாசி’ திரைப்படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
