தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா, தற்போது தயாரித்து நடித்துள்ள ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் விளம்பர பணிகளில் பிஸியாக ஈடுபட்டு வருகிறார். குடும்ப உணர்வுகள் மற்றும் அதிரடி அம்சங்கள் கலந்த இந்த திரைப்படம் வருகிற ஜூன் 19ஆம் தேதி வெளியாக உள்ளது.
சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய சமந்தாவிடம், “உங்களை வெறுப்பவர்களை ஒரே வார்த்தையில் எப்படி விவரிப்பீர்கள்?” என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு நகைச்சுவையாக பதிலளித்த அவர், “ஹேட்டர்ஸா? யாருடைய ஹேட்டர்ஸ்? எனக்கெல்லாம் ஹேட்டர்ஸ் இருக்காங்களா என்ன?” என்று கூறி ரசிகர்களை சிரிக்க வைத்தார்.
மேலும் ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படம் குறித்து பேசிய சமந்தா, இயக்குநர் நந்தினி ரெட்டி முதலில் நடிகை சாய் பல்லவியை மனதில் வைத்தே இந்தக் கதையை உருவாக்கியதாக தெரிவித்தார். ஆனால் சாய் பல்லவி பல திரைப்படங்களில் பிஸியாக இருந்ததால் இந்த வாய்ப்பை ஏற்க முடியவில்லை என்றும், அதன் பிறகுதான் கதையில் சில மாற்றங்கள் செய்து தன்னிடம் கூறியதாகவும் தெரிவித்தார். கதை மிகவும் பிடித்திருந்ததால், படத்தை தயாரித்து அதில் நடிக்க சம்மதித்ததாக சமந்தா கூறியுள்ளார். இந்த தகவல் ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
