தயாரிப்பாளர் கே.ராஜன், கடந்த 1983ஆம் ஆண்டு வெளியான ‘பிரம்மச்சாரிகள்’ திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக தனது திரைப்பயணத்தை தொடங்கினார். அதனைத் தொடர்ந்து, 1991ஆம் ஆண்டு நிழல்கள் ரவி மற்றும் சரத்குமார் நடித்த ‘நம்ம ஊரு மாரியம்மா’ திரைப்படத்தை இயக்கியதுடன், இயக்குநர் செந்தில்நாதனின் ‘தங்கமான தங்கச்சி’ திரைப்படத்திற்கு எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார்.
மேலும், சென்னை விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார். சமீப ஆண்டுகளில் நடைபெற்ற பல திரைப்பட விழாக்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் தமிழ் சினிமாவைச் சுற்றிய பல்வேறு விவகாரங்கள் குறித்து வெளிப்படையாகவும் துணிச்சலாகவும் கருத்து தெரிவித்து வந்தார். குறிப்பாக குறைந்த பட்ஜெட்டில் உருவாகும் திரைப்படங்களுக்கு தொடர்ந்து ஆதரவு குரல் கொடுத்து வந்த அவர், முன்னணி நடிகர்களின் அதிக சம்பளம் குறித்தும் பலமுறை விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.
இந்த நிலையில், இன்று (மே 17) மாலை சென்னை அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது உடலை தீயணைப்பு துறையினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மரணமடைந்த கே.ராஜனுக்கு வயது 85. அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.
