கடந்த 2018ஆம் ஆண்டு விஜய் சேதுபதி மற்றும் திரிஷா இணைந்து நடித்த ‘96’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பிரேம்குமார். காதல் மற்றும் நினைவுகளை மையமாகக் கொண்டு உருவான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து, தமிழில் கார்த்தி மற்றும் அரவிந்த் சுவாமி நடித்த ‘மெய்யழகன்’ திரைப்படத்தை 2024ஆம் ஆண்டு இயக்கினார். அந்த படமும் விமர்சன ரீதியாகவும், ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதையடுத்து, நடிகர் விக்ரமை வைத்து புதிய திரைப்படம் ஒன்றை இயக்க உள்ளதாகவும், ‘96’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தையும் உருவாக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், விக்ரமை வைத்து உருவாக இருந்த திரைப்படம் கைவிடப்பட்டதாகவும், ‘96’ இரண்டாம் பாகம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில், வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிப்பில் புதிய திரைப்படத்தை பிரேம்குமார் இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தில் மலையாள நடிகர் பஹத் பாசில் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை ஷிவதா நடிக்க உள்ளார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தற்போது துவங்கியுள்ளது. இயக்குநர் பிரேம்குமாரின் முந்தைய திரைப்படங்களுக்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இந்த படத்திற்கும் இசையமைக்கிறார். மேலும், மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
