தற்போதைய மலையாள திரைப்படங்களில் தமிழ் வசனங்கள் மற்றும் தமிழ் நடிகர்களின் பங்களிப்பு அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது மலையாளத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘தேவர்’. இந்த படம் கேரளா – தமிழ்நாடு எல்லைப் பகுதிகளை பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ஒரு பேண்டஸி ஹியூமர் த்ரில்லர் திரைப்படமாகும். கேரளா மற்றும் தமிழ்நாடு எல்லைப் பகுதியில் வாழும் மூன்று இளைஞர்களின் வாழ்க்கையில், மிகுந்த சக்தி கொண்ட ஒரு சிலை வந்த பிறகு அவர்கள் வாழ்க்கையில் ஏற்படும் வினோதமான மற்றும் சுவாரஸ்யமான மாற்றங்களை நகைச்சுவையுடன் கலந்து இப்படத்தில் சொல்லப்பட்டுள்ளது.
இயக்குனர் நிஜிஷ் சகாதேவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் தியான் சீனிவாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், கதாநாயகர்களாக நடித்துள்ள மற்ற மூவரும் புதுமுக நடிகர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனுடன், தலைவாசல் விஜய், மொட்டை ராஜேந்திரன், வையாபுரி, ஐஸ்வர்யா உள்ளிட்ட பல தமிழ் நடிகர்களும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சி மற்றும் கோயம்புத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்றுள்ளது. குறிப்பாக, ‘தேவர் மகன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற அதே பாரம்பரிய வீட்டிலேயே, ‘தேவர்’ திரைப்படத்தின் முக்கிய காட்சிகளும் படமாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
