நடிகர் விஷ்ணு விஷால் காதல் கதைகளை மையமாகக் கொண்ட திரைப்படங்களில் அரிதாகவே நடித்து வருகிறார். பெரும்பாலும் ஆக்ஷன், நகைச்சுவை மற்றும் குற்றத் த்ரில்லர் படங்களிலேயே கவனம் செலுத்தி வரும் அவர், தற்போது முழுமையான ரொமான்டிக் காதல் கதையாக உருவாகியுள்ள ‘இரண்டு வானம்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். ‘முண்டாசுப்பட்டி’ மற்றும் ‘ராட்சசன்’ போன்ற வெற்றி திரைப்படங்களை இயக்கிய ராம்குமார் இந்தப் படத்தையும் இயக்கியுள்ளார். இதன் மூலம் விஷ்ணு விஷாலும், ராம்குமாரும் மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர்.
இந்தப் படத்தில் கதாநாயகியாக மமிதா பைஜு நடித்துள்ளார். இவர்களுடன் முனீஷ்காந்த், காயத்ரி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். திபு நினன் தாமஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் அனைத்து பணிகளும் தற்போது நிறைவடைந்து, வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. வரும் மாதத்தில் படம் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்தப் படம் குறித்து இயக்குநர் ராம்குமார் கூறியதாவது, “என்னுடைய முதல் திரைப்படமான ‘முண்டாசுப்பட்டி’ நகைச்சுவையுடன் சிறிய சமூகச் செய்தியையும் கொண்ட பீரியட் பேன்டசி திரைப்படமாக இருந்தது. அதனைத் தொடர்ந்து ‘ராட்சசன்’ திரைப்படம் முழுமையான த்ரில்லர் படமாக உருவானது. ஆனால் இந்த ‘இரண்டு வானம்’ திரைப்படம் காதலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
சமூக நீதியை மிகவும் முக்கியமாகக் கருதும் ஒரு பெண்ணும், வாழ்க்கையை எப்போதும் சந்தோஷமாகவும் கவலையில்லாமலும் அணுகும் ஒரு இளைஞனும் எதிர்பாராத சூழலில் சந்திக்கிறார்கள். எண்ணங்களிலும், வாழ்க்கை அணுகுமுறையிலும் முற்றிலும் வேறுபட்ட இந்த இருவரும் எப்படிக் காதலிக்கிறார்கள், பின்னர் எப்படி ஒன்றாக இணைகிறார்கள் என்பதே படத்தின் முக்கியக் கதை.
மேலும், காதல் என்ற உணர்வையே அறியாத ஒரு மனிதனுக்கு ஒரு பெண்ணின் அன்பு கிடைக்கும் போது, அது அவனை எந்த அளவிற்கு மாற்றுகிறது என்பதையும், அதன் பின்னர் அந்த ஆண், அந்த பெண்ணின் வாழ்க்கையில் எப்படி உறுதுணையாக மாறுகிறான் என்பதையும் இந்தப் படம் பேசுகிறது. ஒருவரின் வாழ்க்கையில் அன்பு கிடைக்கும் போது, அது அவர்களை எப்படிப்பட்ட மாற்றங்களுக்கு உள்ளாக்குகிறது என்பதையும் இப்படம் உணர்வுபூர்வமாகச் சொல்லுகிறது” என்று தெரிவித்துள்ளார்.
