நடிகை ராஷ்மிகா மந்தனா பல மொழிகளில் நடித்துப் பான் இந்திய நடிகையாக உயர்ந்துள்ளார். சமீபத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவை திருமணம் செய்து கொண்ட அவர், தற்போது மீண்டும் திரைப்படங்களில் முழுமையாக கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார். ‘ரணபலி’ திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்துள்ளார்.
இதற்கிடையில், இயக்குநர் ரவீந்திர புல்லே இயக்கும் ‘மைசா’ திரைப்படத்தில், போர்வீராங்கனை போன்ற அதிரடி கதாபாத்திரத்தில் ராஷ்மிகா நடித்துவருகிறார். இந்தப் படத்தின் காட்சிகள் அடங்கிய கிளிம்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அன்பார்முலா பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜேக்ஸ் பிஜோய் இசையமைக்கிறார். மேலும் ‘புஷ்பா 2’ திரைப்படத்தின் மூலம் பிரபலமான தாரக் பொன்னப்பா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் ‘மைசா’ திரைப்படத்தின் முக்கிய காட்சிகளும் சண்டைக் காட்சிகளும் நிறைவடைந்துள்ளதாக ராஷ்மிகா தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். கேரளாவில் நடைபெற்ற நீண்டகால படப்பிடிப்பு அட்டவணையை வெற்றிகரமாக முடித்ததாகவும், இந்த முயற்சியில் ஈடுபட்ட அனைத்து கலைஞர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்தார். மேலும் சண்டைக் காட்சிகளுக்கான பயிற்சி அளித்த குழுவினருக்கும் தனியாக நன்றி கூறியுள்ளார்.
