ஒரே காலகட்டத்தில் திரையுலகிற்கு அறிமுகமான நடிகைகள் திரிஷாவும் அசினும், தங்களது திறமையால் முன்னணி நடிகைகளாக உயர்ந்தனர். பல வெற்றித் திரைப்படங்களில் நடித்த அவர்கள் இருவரும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றனர். அந்த நிலையில், முன்னணி நடிகையாக இருந்தபோதே அசின் திருமணம் செய்து கொண்டு திரையுலகில் இருந்து விலகினார். தற்போது 42 வயதை கடந்திருந்தாலும், திரிஷா இளம் நடிகைகளுக்கு இணையாக இன்னும் திரையுலகில் ஜொலித்து வருகிறார்.
நீண்டகாலமாக திரிஷா மற்றும் அசின் இடையே கருத்து வேறுபாடுகள் உள்ளதாகவும், இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும் பல்வேறு தகவல்கள் வெளிவந்துகொண்டிருந்தன. இந்த நிலையில், அந்த வதந்திகள் குறித்து திரிஷா விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து திரிஷா கூறும்போது, “அசின் மட்டுமல்ல, எந்த நடிகைகளுடனும் எனக்கு மோதல் ஏற்பட்டதே இல்லை. ஏதேனும் நிகழ்ச்சிகளில் சந்தித்தால் கூட, அசினும் நானும் இயல்பாக பேசிக் கொள்வோம். ஆனால், எங்களுக்கிடையே சண்டை உள்ளது என்று பலரும் தவறாக பரப்பிவிட்டனர். உண்மையில் எங்களுக்குள் எந்தவிதமான மோதலும் இல்லை. மேலும் சொல்லப்போனால், அசினுடன் நான் அதிகமாக பழகியதுமே இல்லை. இருந்தபோதிலும், இவ்வாறான வதந்திகளையும் விமர்சனங்களையும் நான் பெரிதாக எடுத்துக்கொள்ளாததால், அவை குறித்து எந்த கவலையும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
—
