சமீப காலமாக பாலிவுட் திரைப்படங்களில் நடிக்கும் சில முன்னணி நடிகர்கள், கோடைகாலத்தின் கடும் வெப்பத்தை தவிர்க்கும் நோக்கில், தங்களது படப்பிடிப்புகளை தென்னிந்திய பகுதிகளில், குறிப்பாக கேரளா மற்றும் ஊட்டி போன்ற இடங்களில் நடத்தும்படி இயக்குநர்களிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனராம்.
அதன்படி, சமீபத்தில் அக்ஷய் குமார் மற்றும் வித்யா பாலன், அனீஸ் பாஸ்மி இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக தனி விமானத்தில் கேரளாவுக்கு பயணம் செய்துள்ளனர். இதற்கு சில மாதங்களுக்கு முன்பு, அக்ஷய் குமார் மற்றும் அஜய் தேவ்கன் இணைந்து நடித்த ‘ஹைவான்’ திரைப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பும் கேரளாவில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அஜய் தேவ்கன் தற்போது ஏற்கனவே நான்கு பாகங்களாக வெளிவந்து வெற்றி பெற்ற ‘கோல்மால்’ திரைப்படத்தின் ஐந்தாவது பாகத்தில் நடித்து வருகிறார். அவரது நெருங்கிய இயக்குநர்களில் ஒருவரான ரோஹித் ஷெட்டி இந்தப் படத்தை இயக்குகிறார். இந்த நிலையில், இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது ஊட்டியில் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு வித்தியாசமான கார் அளவிற்கு நீளமான பைக் ஒன்றும் இந்தப் படத்தில் முக்கிய அம்சமாக இடம்பெற்றுள்ளது. இதுகுறித்து, ஊட்டியில் நடைபெற்ற படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோவை அஜய் தேவ்கன் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
—
