ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கருப்பு’ திரைப்படம் வருகிற மே 14ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில், ‘கருப்பு’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் நேற்று இரவு நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். மேலும், இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இசை வெளியீட்டு விழாவில் பேசிய சூர்யா, இந்த திரைப்படத்தில் தான் ஹீரோ அல்ல என்று கூறியுள்ளார். மேலும், இந்த படம் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும் வகையில் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: “இந்த அளவுக்கு ‘கருப்பு’ திரைப்படம் உருவாக காரணம் கருப்பசாமி தான் என்று நான் நம்புகிறேன். மனிதனின் மீது கடவுள் இறங்கும் போது ஏற்படும் மாற்றத்தை நான் உணர்கிறேன். நம்பிக்கை இருக்கும் இடத்தில் கண்டிப்பாக அதிசயம் நிகழும். ஆர்.ஜே. பாலாஜி பல திறமைகளை கொண்டவர். நான் என்னை ஒரு நடிகராக மட்டுமே பார்க்கிறேன்; ஆனால் அவர் தன்னை இயக்குநர், நடிகர், உரையாளர் என பல பரிமாணங்களில் காண்கிறார். இந்தப் படத்தில் நான் ஹீரோ அல்ல, கருப்பசாமிதான் ஹீரோ. படம் பார்த்தவர்கள் முதல் பாதி மிகவும் உணர்ச்சிகரமாகவும், இரண்டாவது பாதி திரையரங்கு அனுபவத்தை அதிகரிக்கும் வகையிலும் இருப்பதாக கூறுகிறார்கள். மே 14ஆம் தேதி உங்கள் கையில் உள்ளது; நிச்சயமாக உங்களுக்கு இந்த படம் பிடிக்கும். திரையரங்குகளில் சந்திப்போம்,” என்று தெரிவித்தார்.
—
