ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘கருப்பு’ திரைப்படம், டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ளது. இந்த படத்தில் திரிஷா கதாநாயகியாக நடித்துள்ளதுடன், இந்திரன்ஸ், நட்டி நட்ராஜ், சுவாசிகா, சிவதா, சுப்ரீதா மற்றும் யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து, வரும் மே 14ஆம் தேதி வெளியீட்டுக்காக தயாராக உள்ளது.
இந்த நிலையில், இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி இப்படத்தில் சூர்யா ஒரு சூப்பர் பவர் கொண்ட கதாநாயகனாக நடிக்கிறார் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, “கருப்புசாமி என்பது நம் தமிழ்நாட்டின் அடையாளமான தெய்வங்களில் ஒன்றாகும். மத எல்லைகளை தாண்டி, அய்யனார், முனி, கருப்புசாமி போன்ற தெய்வங்கள் கிராமங்களின் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு சின்னமாக நிற்கின்றன. மக்கள் வெளியே செல்லும் போதும், உள்ளே வரும்போதும் ‘கருப்பு கூட வா’ என்று வேண்டிக் கொண்டு செல்கின்றனர்.
இன்றைய உலகம் பல்வேறு ஆபத்துகளால் சூழப்பட்டுள்ள நிலையில், அவற்றை சமாளிக்க ஒரு அதிசய சக்தி கொண்ட ஹீரோ வந்தால் எப்படி இருக்கும்? அந்த ஆபத்துகளை எல்லாம் சமாளித்து, தீமைகளை அழித்து நல்லதை நிலைநாட்டும் கதையாக இந்த படம் உருவாகியுள்ளது. இது மக்களை கவரும் விதமாகவும், அதிரடி அம்சங்களுடனும் வடிவமைக்கப்பட்டுள்ளது” என்று அவர் விளக்கியுள்ளார்.
—
